ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் டி.சுதர்சனம், கே.எஸ்.கே.ராஜேந்திரன், அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் சண்முகவேலு, பிரேமா, தி.மு.க உறுப்பினர்கள் குத்தாலம் அன்பழகன், சின்னச்சாமி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும், மழலையர் பள்ளிகளை தொடங்கும் திட்டம் என்பது மிகப் பெரிய திட்டம். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதால் இது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 756 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இவ்வளவு நிறுவனங்கள் தேவையா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் புற்றீசல் போல பெருகி வரும் இந்த நிறுவனங்களை தடுப்பதற்கு மத்திய நிறுவனத்தோடு கலந்து பேசப்பட்டுள்ளது.
இது போன்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுவதாக தெரிந்தால் அரசு அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அப்போது மதுரை மாநகராட்சி பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.