சென்னையில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ - மாணவிகளுக்கு உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றிப் பெற்று, அரசு உயர் அதிகாரிகளாக, தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தியும், இனி வருங்காலங்களில், உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு உயர்த்துவற்கும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்று, டெல்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதை, ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, டெல்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு, பயணச் செலவினமாக தலா 2000 ரூபாய் வழங்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளினால், தமிழக மாணவ மாணவியர் அதிக அளவில் அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.