மதுரை ராஜாஜி மருத்துவமனை புதுடெல்லியில் உள்ள அகில இந்திய அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனைக்கு இணையாக அமைக்கப்படும் என்றும் இதற்காக மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது இத்தகவலை தெரிவித்த அமைச்சர், தேனி மாவட்டத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு இணையாக மிகப் பெரிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய மருத்துவமுறைகளில் தொழில் செய்யும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ முறைக்குரிய மருந்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் அவர்கள் அலோபதி முறையில் ஊசிகள், மருந்துகளை பயன்படுத்தினால் மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.