''தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் மார்ச் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அலுவலக நேரங்களில் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும்'' என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரையும், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன. தேர்வுக்கால அட்டவணையின்படி, குறிப்பிட்ட நாளில் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் மார்ச் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அலுவலக நேரங்களில் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும். மண்டல துணை இயக்குனர்களால் அறிவிக்கப்படும் மையங்களுக்குச் சென்று ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் ஹால்டிக்கெட்டுகள் தபாலில் அனுப்பப்படாது.
ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகத்தையும், ஆங்கிலோ இந்தியன் மாணவர்கள் சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தையும் அணுக வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக்குப் பிறகு, தேர்வு மையங்களில் வழங்கப்பட இருக்கும் மதிப்பெண் சான்றிதழை நேரில் சென்று பெற இயலாதவர்கள் தங்கள் சுயமுகவரி எழுதப்பட்ட, ரூ.30 மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய தபால் உறையை தேர்வு எழுதும் நாளில் தேர்வுக்கூட தலைமை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வசுந்தராதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.