இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா 11.08.2011 அன்று 2011-12 ஆம் ஆண்டைய திருத்திய வரவு, செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார்.
மேலும் நடப்பாண்டில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடியே 75 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், 2011-12 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியான 2 கோடியில் வரையறுக்கப்படாத நிதியான 87 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து தங்களின் தேவைக்கேற்ப தலா ஒரு புதிய மடிக்கணினி (லேப்-டாப்) அல்லது கணினி (கம்ப்யூட்டர்) பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி (பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு) ஆகியவற்றை ஒருமுறை மட்டும் வாங்கிக் கொள்வதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் பல மேலான தகவல்களுடன் விவாதங்களில் பங்கேற்க உதவும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.