சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே என்கவுன்ட்டரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறைவாசிகள் உரிமைகள் மையத்தின் இயக்குனர் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், சிவகங்கை மாவட்டம் தீத்தன்கோட்டை அருகே பிரபு, பாரதி என்ற 2 விசாரணை கைதிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றபோது நடந்த என்கவுண்டரில் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த போலீஸ் டி.எஸ்.பி. வெள்ளத்துரை தற்காப்புக்காக இருவரையும் சுட்டு கொன்றதாக கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளிகளை சுட்டு கொன்ற போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் டி.எஸ்.பி. வெள்ளத்துரை மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு மனு கொடுத்தேன். ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே 2 விசாரணை கைதிகளை சுட்டுக் கொன்ற வெள்ளத்துரை மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.