உலகவங்கி உதவியுடன் கூவத்தை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்
சென்னை , வியாழன், 9 ஜூலை 2009 (13:47 IST)
உலகவங்கி உதவியுடன் கூவம் ஆற்றை தூர்வாரி சீர்படுத்த தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில், மழைக்காலம் வரப்போகிறது. வட சென்னையில் ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர், எம்.ஜி.ஆர்.நகர், எழில் நகர் போன்ற பகுதிகளில் வெள்ளம் நிரம்பி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள கால்வாய்களில் தூர்வாரி தடுப்புச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா என்று வினா எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், பக்கிங்காம் கால்வாயை சுத்தப்படுத்துவதற்கு நிரந்தர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,447 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.முதல் கட்டமாக சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த நிதியில் வட சென்னை பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரி செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் வெள்ளம் வராமல் தடுப்பதற்கு உரிய பணிகளையும் செய்து வருகிறோம்.உலக வங்கியிடம் நீர்வழிப் பாதைகளை செப்பனிடும் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கூவம் ஆற்றை தனித்திட்டமாக எடுக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அமெரிக்காவிலும், கூவம் ஆறு போன்று இருந்த ஒரு நதி சீரமைக்கப்பட்டுள்ளது. அதனையும் ஒரு குழுவினர் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். எனவே கூவம் ஆற்றை தூர்வாரி சீர்படுத்துவதில் இந்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்று துரைமுருகன் கூறினார்.