வரும் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் இளையான்குடி சட்டமன்ற இடைத்தேர்தலை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இளையான்குடி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மக்கள் மாநாடு கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்க வேண்டும் என்றும், அதுவரை இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அக்கட்சி செயலர் சதீஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
''இதே போன்ற பிரச்சனை பர்கூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏற்பட்டபோது தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் எங்கள் கட்சி விஷயத்தில் மட்டும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. ஆகவே மறுபரிசீலனை செய்து எங்கள் கட்சி வேட்பாளர் கலைமணியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டு பணிகள் நடைபெற்றால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி, இடைத்தேர்தலை தடை செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை நிராகரித்தார்.