இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி வரும் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை, மாநில சுயாட்சி அதிகாரம் உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், மறுவாழ்வு நடவடிக்கையை உறுதி செய்திடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 7ஆம் தேதி டெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.க்கள் கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், அ.சவுந்தரராஜன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.