இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வரும் இந்திய ஆட்சியாளர்களின் போக்குகளை அ.தி.மு.க அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்களப்படையை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய அரசு பயிற்சியளித்து வருவதாக தெரியவந்துள்ளது. அதனையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஓர் இரு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கள இனவெறியர்களை அரசியல் ரீதியாகவும், இராணுவம் ரீதியாகவும், வலிமைப்படுத்துவதில் இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எல்முனையளவும் பொருட்படுத்தாமல் சிங்கள காடையர்களால் இந்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே பலமுறை இவ்வாறே இராணுவ பயிற்சிகளை வழங்கியதை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து இருகின்றன. ஆனால் மீண்டும் தமிழ்நாட்டிலே சிங்களவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது என்றால் தமிழக மக்களின் எதிர்ப்பை எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்பது தெரிய வருகிறது.
இந்திய அரசுக்கும், சிங்கள அரசுக்கும், இடையில் மிகவும் வழுவான, உறுதியான நட்புறவு என்பதையும் வெளிப்படுத்துகிறது. தமிழீழத் தமிழர்களையும், தமிழ்நாட்டு மீனவர்களையும் கொன்று குவித்து வரும் சிங்கள படையினரை இந்திய அரசு வலிந்து வலிந்து ஆதரித்து வருகிறது.
தமிழ் மக்களின் பாதிப்புகளை பற்றி கவலைபடாமல் சிங்கள இனவெறியர்களுக்கு உறுதுணையாக நிற்கும் இந்திய அரசின் தமிழ் விரோதப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. தமிழர்களின் பெரும் ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றியிருக்கிற அ.தி.மு.க அரசு இந்திய ஆட்சியாளர்களின் இந்தகைய போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.