இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை அறிவுறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 26ஆம் தேதி சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் முதலமைச்சர் கருணாநிதி கபட நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.இலங்கைத் தமிழர்கள் தாக்கப்பட்ட போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு நாடகங்களை அவர் நடத்தினார். அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். மீதியுள்ள பேனர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும், அனாதைகளாகவும் அல்லல்பட்டு வருகிறார்கள். இலங்கைத் தமிழர்களை ஒழித்துக் கட்டிய இலங்கை அரசு தற்போது தமிழக மீனவர்கள் மீதும் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 16ஆம் தேதி 21 மீனவர்களை இலங்கை அரசு சிறைப்பிடித்து சென்று விட்டது. ஒரு வார காலத்திற்கு மேலாகியும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மீனவர்கள் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக முதல்வர் அறிக்கை விடுவதும் பிரச்சனைக்கு தீர்வு காண பயன்படாது.நதிநீர் பிரச்சனைகளில் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு சாதகமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், அதை தட்டிக் கேட்காத முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை அறிவுறுத்தாத மத்திய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசை தட்டிக் கேட்காத மத்திய அரசை கண்டித்தும் வடசென்னை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த ஆர்ப்பாட்டம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பொன்னையன் தலைமையிலும், வடசென்னை மாவட்ட செயலர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.