இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பெரியார் திராவிட கழகம் தயாரித்த சி.டி.யை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெரியார் திராவிட கழகம் சார்பில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த 'இனி என்ன செய்ய போகிறோம்' என்ற சி.டி.யை தயாரித்தது. இந்த சி.டி.யை தேர்தல் சமயத்தில் வெளியிட மாம்பலம் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தென்சென்னை மாவட்ட பெரியார் திராவிட கழக தலைவர் தபசிகுமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.சுகுணா, இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பான சி.டி.யை வெளியிடஅனுமதி மறுத்து மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் வெளியீட்டு விழாவுக்காக, ஒரு வாரத்திற்குள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விண்ணப்பித்த மனுவை 4 நாட்களுக்குள் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து காவல்துறையினர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.