தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களிடையே பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- 20 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் சென்றுள்ளேன். அப்போது ஓசூரில் ஏராளமான சிறு தொழிற்சாலைகள் இருந்ததை பார்த்து வியந்திருக்கிறேன். இன்று அந்த தொழிற்சாலைகளின் நிலை என்ன? அனைத்து தொழிற்சாலைகளும் நலிவடைந்துள்ளன. காரணம் என்ன? மின்சாரம் இல்லை. தொழிற்சாலை உரிமையாளர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் உள்ளனர். தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை தொடங்குவேன் என்றார்கள். ரயில் நிலையம் அமைப்பதாக கூறினார்கள். இந்த மாவட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என 3 மாநில எல்லையில் உள்ளது. ஆனால் ரயில் போக்குவரத்து இல்லை.
இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திரமோடி பிரதமராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.