இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆசிரியப் பணிபுரிந்து புகழ்குவித்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
சிறப்பாக பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு அந்நாளில் நல்லாசிரியர் விருது என வழங்கப்பட்ட பெயரினை மாற்றி அனைத்து ஆசிரியர்களும் மகிழும் வகையில், “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” என வழங்கிட ஆணையிட்டதை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவுகூறுகிறேன்.
“ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்” எனப் பேரறிஞர் அண்ணா கூறிய மொழிகளை நினைவில் கொண்டு, தி.மு.க. அரசு அமையும் காலங்களிலெல்லாம் ஆசிரியர்களின் சமூக பொருளாதார நிலைகளை உயர்த்திடும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு, ஆசிரியர் குடும்பங்கள் பயனடைந்துள்ளதை அனைவரும் அறிவர்.
குறிப்பாக 2006ல் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது, பதவி ஏற்ற இரண்டு வாரங்களில் ஏறத்தாழ 46 ஆயிரம் ஆசிரியர்கள் பெற்று வந்த தொகுப்பூதியத்தை ரத்து செய்து அவர்களுக்கு 1-6-2006 முதல் காலமுறை ஊதியம் வழங்கியது, மத்திய அரசின் 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1-1-2006 முதல் நடைமுறைப்படுத்தி, ஆசிரியர் சமுதாயம் மிகப் பெரிய அளவில் பயன்பெற ஆவன செய்தது.
ஆசிரியர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் நான்கு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவிகள் பெற “புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை” நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் குடும்பங்களைக் காத்தது போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு ஆசிரியர் குடும்ப நலன்களில் தனிக் கவனம் செலுத்தப்பட்டதை இவ்வேளையில் நினைவுபடுத்திட விழைகிறேன்.
சமச்சீர் கல்வித் திட்டம், உச்சநீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்குரிய 200 பள்ளி வேலை நாட்களில் ஏறத்தாழ 60 பள்ளி வேலை நாட்களுக்கு மேல் புத்தகங்கள் இல்லாமல் கழிந்ததால் இந்த ஆண்டில் மாணவ-மாணவியர் பெற வேண்டிய திறன்களை அடைவதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதனை மனதில் கொண்டு, மாணவ-மாணவியர் நமது தமிழ்நாட்டுச் செல்வங்கள், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு நமது தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு எனும் உணர்வோடு, சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்திட வேண்டுமென அருமை ஆசிரிய நண்பர்கள், அனைவரையும் அன்போடு கேட்டுக்கொண்டு, தமிழக ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.