ஆசிரியர்கள் நியமனத்தில் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு : கருணாநிதிக்கு வரதராஜன் கடிதம்
சென்னை , செவ்வாய், 16 ஜூன் 2009 (13:15 IST)
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் அருந்ததியருக்கான உள்இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி முதலமைச்சர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழக அரசு சுமார் 7 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களை விரைவில் நியமனம் செய்ய இருப்பதாக அறிகிறோம். இந்த நியமனத்தின் போது, அருந்ததியர் உள்ஒதுக்கீடு அமலாகாது என பத்திரிகைச் செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையெனில் வருந்தத்தக்கது ஆகும்.அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிட்ட பிறகே பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில், சமூக பொருளாதார ரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள அருந்ததிய மக்களில் இப்பதவிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு நியாயம் வழங்கிட வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட இந்நடவடிக்கையை தாங்கள் அவசியம் மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன்'' என்று கடிதத்தில் கூறியுள்ளார்.