விடைத்தாள் திருத்தும் பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 10 விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர்- ஜனவரியில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது.
இதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்வுகளை நன்றாக எழுதியிருந்தபோதும் பல மாணவர்கள் ஒற்றை இலக்க மதிப்பெண்களைப் பெற்றுத் தவறியிருந்தனர். இதையடுத்து மறுமதிப்பீட்டிற்குப் பணம் செலுத்தி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் வேறு ஆசிரியர்கள் மூலம் திருத்தப்பட்டது. அப்போது பலர் பலமடங்கு மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெற்றுத் தேர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "செமஸ்டர் விடைத்தாள்களைத் திருத்துவதில் ஏற்பட்ட தவறு குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தேர்வு கட்டுப்பாடு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 10ஆசிரியர்கள் தவறு செய்தது தெரியவந்துள்ளது.
விடைத்தாள்களை திருத்தும் போது மெத்தனமாக இருந்து தவறாகத் திருத்திய 10 விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்குமாறு தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வேறு எந்த கல்லூரிக்கு சென்றாலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.
மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு கட்டிய பணம் திருப்பி கொடுக்கப்படும்."என்றார்.