சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்துக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க கேட்டு அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியம் கடந்த 13.12.2004இல் கைதானார். தற்போது காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரவிசுப்பிரமணியம் அடிக்கடி மயங்கி விழுகிறார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறப்பு மருத்துவரிடம் சரியான சிகிச்சை கொடுக்காததால் ரவிசுப்பிரமணியத்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை தனியார் மருத்துவமனையிலோ அல்லது அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவிலோ அனுமதித்து சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். அவரது தாயாரான எனக்கு ரவி சுப்பிரமணியத்தை பார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி, மனுதாரர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் முறையிடாமல் நேரிடையாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் முதலில் சம்பந்தப்பட்ட சிறைத்துறையிடம் முறையீடு செய்யும்படி கூறி வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளி வைத்தார்.