இப்படி புகழ்பெற்ற இந்த பவானிசாகர் அணை பகுதியில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வர அச்சப்படுகின்றனர். இதற்கு காரணம் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் பூங்கா மற்றும் அணைப்பகுதிக்கு வந்து செல்லும் காட்டு யானைகள் ஆகும்.
வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் சாதாரணமாக பவானிசாகர் அணை முன் உள்ள பூங்காவிற்குள் வந்து செல்வதும் பூங்காவின் தடுப்பு சுவரை உடைத்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போது நாள்தோறும் அணையின் மேல்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து ஜாலியாக உலா செல்வது வழக்கமாக மாறிவிட்டது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை பத்து மணிவரை அணையின் மேல் ஒரு குட்டி உட்பட எட்டு யானைகள் ஜாலியாக உலா சென்றது. இதனால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மற்றும் மீன்வள அதிகாரிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த யானைகள் அணையின் மேல்பகுதியில் இருந்து பூங்காவின் அருகில் உள்ள மின்உற்பத்தி அருகே வந்தது.
இதனால் பூங்கா பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து பூங்காவை விட்டு வெளியே ஓடினர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்த யானை கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.