அனைவரிடடும் அன்பு காட்டியவர் மகாவீரர் - கருணாநிதி வாழ்த்து
, புதன், 4 ஏப்ரல் 2012 (15:03 IST)
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டிய மகாவீரர் பிறந்தநாளையொட்டி ஜைன மக்களுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பையும், அருளையும், அறத்தையும் போதித்த மாமனிதராம் வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள் ஏப்ரல் திங்கள் 5ஆம் நாள் நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இன்றைக்கு 2611 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 599இல் வடஇந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தில் ஓர் அரச குடும்ப வாரிசாகப் பிறந்து, வளர்ந்து, இளம் வயதிலேயே இல்லறத்தைத் துறந்து, தமது பொன்னையும், பொருளையும் ஏழைகளுக்கு வாரி வழங்கித் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர் வர்த்தமான மகாவீரர். மகாவீரர், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டியவர்; எந்த ஓர் உயிரினத்திற்கும் இன்னல் இழைக்காமை, பொய் கூறாமை, பிறர் பொருளைக் களவு செய்யாமை போன்ற பல அருங்குணங்களை மனித சமுதாயத்தில் வளர்ப்பதையே கொள்கைகளாகக் கொண்ட ஜைன சமயத்தை வளர்த்தவர்.அப்பெருமகன் வழியில், அவர் போதித்த கொள்கைகளையே தமது வாழ்வியல் நெறிகளாகப் பின்பற்றித் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் அவர் பிறந்த நன்னாளில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.