சென்னை அடையாறில் ரூ.2.30 கோடியில் 30 படுக்கை அறைகளுடன் மகப்பேறு மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் கட்டிடங்கள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அடையாறில் வெங்கட் ரத்னம் நகரில் ரூ.2.30 கோடி செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும்பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இம்மருத்துவமனை 30 படுக்கையறைகளுடன் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் சுமார் 1800 சதுர அடியில் கட்டப்படுகிறது. இந்த மருத்துவமனை வரும் டிசம்பர் திங்களில் முடிக்க திட்டமிட்டிருந்தாலும், வரும் ஜூலை திங்களுக்குள் முடிக்கப்படும்.
அதே போன்று சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம்-2, வார்டு- 15ல் ரூ.1 கோடியே 8 லட்சம் செலவில் சஞ்சீவராயன் பேட்டையிலும், மண்டலம்-3, வார்டு-41ல் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் புளியந்தோப்பில் மண்டல அலுவலகம் பின்புறத்திலும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மண்டலம்-4, வார்டு-58ல் ரூ. 1 கோடி செலவில் அயனாவரத்தில் யுனைடெட் இந்தியா நகரிலும், மண்டலம்-5, வார்டு-68ல் ரூ. 1 கோடியே 24 லட்சம் செலவில் செனாய் நகரிலும், மண்டலம்-6, வார்டு-93ல் ரூபாய் 1 கோடியே 39 லட்சம் செலவில் மீர்சாகிப் பேட்டையிலும், மண்டலம்-8, வார்டு-120ல் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் வடபழனியிலும், மண்டலம்-10ல் ரூ. 2.30 கோடி செலவில் அடையாறில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதே போன்று மண்டலம்-9ல் ஜீன்ஸ் சாலையில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் உரிய காலத்திற்கு முன்னதாகவே மாநகராட்சி சார்பில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் சொந்தக்கட்டடங்களிலேயே இயங்கும் என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.