அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் வருவதை அதிகரிக்க 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தாண்டு முதல் இரண்டு வண்ண உடைகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனநாயகத்தின் நாளைய தூண்களாக விளங்க உள்ள குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்துடன் வளர்க்கப்பட்டால் தான், அவர்கள் வருங்காலத்தில் இந்த நாட்டை நன்முறையில் வழிநடத்திச் செல்லும் வலிமை மிக்க தலைமுறையினராக உருவெடுப்பார்கள். இந்த நோக்கத்தை எய்தும் பொருட்டு உருவாக்கப்பட்டவை தான் அங்கன்வாடி மையங்கள்.
புகையில்லா சமையல் அறை இந்த மையங்களில், இணை உணவு, சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு, முட்டை, ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு புரதசத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.
தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர். இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.
இந்த அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக 16,645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சுற்றுச்சூழலுடன் கூடிய புகையில்லா சமையலறை ஒன்று அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டார்.
இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, 16,645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சமையலறை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு வண்ண உடை தற்பொழுது இந்த ஆண்டு, அதாவது 2012-2013ஆம் ஆண்டில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டாவது கட்டமாக 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் முன்னோடித் திட்டத்தை தொடக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.