பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதலர் தினத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்த இளம் காதல் ஜோடிக்கு ஆட்டோ டிரைவர் உதவியுடன் அரசியல் கட்சி அலுவலகத்தில் தடபுடலாக திருமணம் நடந்தது. அவினாசி அருகே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரனின் மகன் விவேக் (21). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள விவேக், அதே பகுதியை சேர்ந்த சங்கரலிங்கத்தின் மகள் உமாவை (19) கடந்த 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
பிளஸ் 2 படித்து வந்த உமா காதல் பெற்றோருக்கு தெரிந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே நிலைமைதான் விவேக்குக்கும். இதனால் மனம் உடைந்த இளம் காதலர்கள் காதலர் தினத்தன்று தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர்.
கடந்த 13ஆம் தேதி இரவு கோவை பஸ் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் வெள்ளலூர் சென்றனர். ஆட்டோவில் செல்லும் போது இருவரும் மனம் உடைந்த நிலையில் பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் விசாரித்த போது அவர்கள் காதல் ஜோடி என்பதும், திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்திருந்ததும் தெரிய வந்தது. காதல் ஜோடியை அவினாசியில் உள்ள தலித் விடுதலை கட்சி அலுவலகத்திற்கு ஆட்டோ டிரைவர் அழைத்து வந்துள்ளார்.
தலித் விடுதலை கட்சி நிர்வாகிகள் காதல் ஜோடியின் பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொண்டு காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு காதலர்களின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் காதல் ஜோடிக்கு தலித் விடுதலை கட்சி அலுவலகத்திலேயே நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கட்சி நிதியில் இருந்து காதல் ஜோடிக்கு புத்தாடை, மாலை மற்றும் தாலி வாங்கப்பட்டது. சமூக ஆர்வலர் மாரிமுத்து தலைமையில் தலித் விடுதலை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆறுமுகம் முன்னிலையில் காதலன் விவேக், காதலி உமா கழுத்தில் தாலி கட்டினார். தடபுடலாக நடந்த இந்த கல்யாணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, புதுமண தம்பதியருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தங்கும் வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று தலித் விடுதலை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.