ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு வி.என்.சுதாகரன் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் இருந்து ஹெராயின் என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக தோட்டம் பாஸ்கர், வி.என்.சுதாகரன், மொய்னுதீன், ஜலாலுதீன் ஆகியோர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிபதி நாகராஜ் பிடியாணை பிறப்பித்தார்.
இந்த நிலையில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி நாகராஜ் முன்பு இன்று சுதாகரன் சரணடைந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக நீதிபதி பிறப்பித்த பிடியாணையை நீதிபதி திரும்ப பெற்றுக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் வழக்கு விசாரணையின்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று சுதாகரனுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.