விருது பெற சென்றிருந்த தமிழக அறிஞர்கள் 15 பேர் டெல்லி விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்.
2005-06, 2006-07, 2007-08ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் விருது வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் விருதுகளை வழங்கி அறிஞர்களை கவுரவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 102 வயதான பேராசிரியர் அடிகளாசிரியர், தொல்காப்பியர் விருதும், அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் குறள்பீட விருதும் பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.அரவிந்தன், தஞ்சாவூரை சேர்ந்த ஒய்.மணிகண்டன், எஸ்.கலைமகள், ராமநாதபுரத்தை சேர்ந்த வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர், புதுச்சேரியை சேர்ந்த கே.பழனிவேலு, மதுரையை சேர்ந்த எஸ்.சந்திரா, அரியலூரை சேர்ந்த அரங்க.பாரி, மு.இளங்கோவன், திருவாரூரை சேர்ந்த எம்.பவானி, நாகையை சேர்ந்த ஆர்.கலைவாணி, ஏ.செல்வராசு, பி.வேல்முருகன், ஏ.மணவழகன், எஸ்.சந்திரசேகரன், சிமோன் ஜான் ஆகிய 15 பேர் இளம் அறிஞர்கள் விருதைப் பெற்றனர்.
குடியரசுத் தலைவரிடம் விருதுபெற 15 தமிழ் அறிஞர்கள் இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதாக இருந்தது. 7 மணி விமானத்தை பிடிக்க அதிகாலை 5 மணிக்கெல்லாம் டெல்லி விமான நிலையம் வந்துவிட்டனர்.
ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும் போர்டிங் பாஸ் வழங்கப்படாமல் 15 அறிஞர்களும் அலைகழிக்கப்பட்டனர். 4 நேரமாக அவர்கள் அலைகழிக்கப்பட்டதால் 7 மணி விமானத்தை தவறவிட்டனர். இதனால் செய்வதறியாது அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் பரிதவித்து வருகின்றனர்.