மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்தி பக்தர்களின் வழி பாட்டு உரிமையை பறித்து அரவங்காடாக மாற்றிட மத்திய அரசு முனைகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புராதன சின்னங்களாகத் தமிழகத்தின் பழமையான இரண்டு நகரங்களில் முதன்மையானது பல்லவப் பேரரசின் துறைமுகப்பட்டினமான திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரம். இங்கு அமைந்துள்ள தலசயினப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 63-ஆவது ஆலயமாக எளிமையாக தரையில் பள்ளி கொண்டு இருப்பதனால், தலசயனப் பெருமாள் என்று அழைக்கப்பெற்றது.
அன்று முதல் இன்று வரை இவ்வாலயத்தில் பூஜைகள், சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் முறையாக செய்து வரப்படுகின்றன. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவதாக அவதரித்த பூதத்தாழ்வார் இப்புண்ணிய பூமியில் பிறந்துதான் பக்தி மணம் கமழும் நெஞ்சை அள்ளும் தமிழ்ப்பாக்களை நாலாயிரத்திவ்விய பிரபந்தத்திற்கு வழங்கினார்.
சிறப்புக்குரிய மன்னனாக இருந்து ஆழ்வாராக இறைப்பணியாற்றிய திருமங்கையாழ்வார் தலசயன பெருமாளை ஆராதித்து 20 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்வித்தார். ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல் பொருள்துறை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
பொதுமக்களின் கருத்து அறியப்படாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், மத்திய காங்கிரஸ் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எதேச்சதிகாரமானது. ஏற்கனவே இந்திய தொல் பொருள் துறையின் 2010-ஆம் ஆண்டு மக்கள் விரோத சட்டத்தால் மாமல்லபுரம் வாழ்மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி, சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் நடைபெற முடியாமல் உள்ளது. அங்கு ஒட்டுமொத்தமாக மாமல்லபுரம் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் சட்டத்தின் மூலம் முடக்கப்பட்டதால் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கப்புரி இன்று நரகமாக மாறி போய் உள்ளது.
இந்நிலையில் தலசயனப் பெருமாள் கோவிலை கைய கப்படுத்தி பக்தர்களின் வழி பாட்டு உரிமையை பறித்து அரவங்காடாக மாற்றிட முனைகிறார்கள். இதற்கு இதுவரை மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கின்ற மத்திய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளில் ஒன்று தான் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலை கையகப்படுத்த நினைக்கும் முயற்சி. மாநில அரசு தன் கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டுகிறேன். தலசயன பெருமாள் கோவில் மீட்புக்குழு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் ம.தி.மு.க. பக்கபலமாக இருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.