முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 18 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
இதன் அடிப்படையில், அவர்கள் 3 பேரையும் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய 19 ஆம் தேதி தீர்மானித்த தமிழக அரசு, அதுபற்றி 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி தமிழக அரசு, சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ஆயுள்தண்டனை அனுபவிக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.