தமிழ் மீனவர்களை கொன்று குவித்ததற்கு பரிசாகத்தான் இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி வழங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண் டிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை அரசுக்கு இந்தியா உதவிகளை வாரி வழங்கி கொண்டிருக்கிறது.
காங்கேசன் துறைமுகத்தை பல நூறுகோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வரும் இந்திய அரசு, அடுத்தக் கட்டமாக இலங்கை கடற்படைக்கு பயிற்சியும், பிற உதவிகளையும் வழங்க இருக்கிறது. இலங்கையுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வரும் நிலையில் அந்நாட்டு கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல.
அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்று குவித்ததற்கு பரிசாகத்தான் இந்த பயிற்சியை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறதா என்ற வினா தமிழகத்தில் உள்ள தமிழர்களின் மனதில் எழுந்திருக்கிறது. எனவே தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்.
இலங்கையுடனான இராணுவ உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.