Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துண்டு துண்டாக கிடைத்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது: ஒருதலைக்காதலால் பயங்கரம்

துண்டு துண்டாக கிடைத்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது: ஒருதலைக்காதலால் பயங்கரம்

Ilavarasan

, செவ்வாய், 6 மே 2014 (09:19 IST)
கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி போரூர் ஏரியில் வீசப்பட்ட பெண், சென்னையைச் சேர்ந்த புதுப்பெண் என்பது தெரியவந்துள்ளது. ஒருதலைக் காதல் தகராறில் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
 
சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினார்கள்.
 
கடந்த சில நாட்களில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
 
அப்போது சென்னை அசோக்நகரை அடுத்த நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10 ஆவது தெருவில் வசித்து வந்த ஸ்ரீராமின் மனைவி ரேகா (வயது 25) என்பவர் வேலைக்கு சென்று 2 நாட்களாகியும் காணவில்லை என்பது தெரியவந்தது. ரேகா கிண்டியில் உள்ள ஒரு கால் சென்டரிலும், நெசப்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து ரேகாவின் கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று காவல்துறையினர் உடலை காட்டினார்கள். ஸ்ரீராம் அது தனது மனைவி ரேகா தான் என்று அடையாளம் காட்டி கதறி அழுதார்.
 
ஸ்ரீராம் சில வருடங்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது தன்னுடன் பணிபுரிந்த ரேகாவை அவர் காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஸ்ரீராம் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
திருமணத்திற்கு முன்பு ரேகா கால்சென்டரில் வேலை செய்தபோது, அவரை வீட்டில் இருந்து நிறுவனத்திற்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரேகா உள்ளிட்ட ஊழியர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியை மாதவரம், சீத்தாபதி நகரை சேர்ந்த டிரைவர் சாம்சன்(25) செய்து வந்தார். ரேகாவை சாம்சன் ஒரு தலையாக காதலித்து வந்தார்.
 
தனது காதலை அவர், ரேகாவிடம் பல முறை தெரிவித்துள்ளார். ஆனால், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறி ரேகா மறுத்து வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து சாம்சன், ரேகாவை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்தார். இதுகுறித்து ரேகாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். காவல்துறையினர் சாம்சனை எச்சரித்து அனுப்பினர்.
 
இதற்கிடையே ரேகாவிற்கும், ஸ்ரீராமுக்கும் திருமணம் நடந்ததால் ஆத்திரத்தில் இருந்த சாம்சன் ‘தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று நினைத்து, சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேகாவை கடத்திச் சென்று கொலை செய்து கொடூரமாக உடலின் கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி மூட்டை கட்டி போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்றார். மேற்கண்ட தகவல்கள் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
மேலும், ரேகா கொலை செய்யப்படுவதற்கு முன்பு கற்பழிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தலைமறைவாக உள்ள சாம்சன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதுகுறித்து ரேகாவின் உறவினர்கள் கூறுகையில், ‘சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரேகா, நான் லேட்டாக வேலைக்கு போகிறேன். இரவு லேட்டாக தான் வருவேன் என்று கூறிவிட்டு சென்றாள். ஆனால் இந்த கொலைகாரன் ரேகாவை இப்படி கொடூரமாக கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி ஏரியில் வீசிவிட்டு சென்று விட்டானே?’ என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
 
ஒருதலைக் காதலால் நேர்ந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil