சென்னை தாம்பரம் அருகே உள்ள அகோபில மடத்திற்குள் புகுந்த கொள்ளையனை தடுத்த பெண் ஊழியர் கத்தியால் குத்தி கிணற்றிற்குள் வீசி படுகொலை செய்யப்பட்டார். தப்பிக்க முயன்ற கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். இந்த நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் பிருந்தாவன் தெருவில் புகழ்பெற்ற அகோபிலமடம் உள்ளது. இது 600 ஆண்டு பழையானது. முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த மடத்திற்கு வருவதுண்டு.
இந்த மடத்தினை 44வது ஜீயர் நிர்வகித்து வருகிறார். இங்கு பாடசாலை, கல்யாண மண்டபம், தியான மடம் ஆகியன உள்ளது. இந்த மடத்தின் 44வது அழகிய சிங்கர் ஜீயரின் பிறந்த நாள் விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கனகவள்ளி (60) மடத்தில் தங்கி இருந்தார். இவரது கணவர் வாசுதேவன் இங்குள்ள பாடசாலையில் வார்டனாக வேலைபார்த்து வருகிறார். இந்த மடத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கியுள்ளனர். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து அவர்கள் பணிகளை தொடங்கி விடுவது வழக்கம்.
அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு கனகவள்ளி என்ற பெண் மடத்திற்கு முன்னே கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்துள்ள மர்ம ஆசாமி ஒருவன் கனகவள்ளியிடம் இருந்து நகைகளை பறிக்க முயன்றுள்ளான். அவர் சத்தம் போடவே கத்தியால் குத்திய கொள்ளையன் கிணற்றில் தூக்கி போட்டுள்ளார்.
இந்நிலையில் ஊழியர்கள் அங்கு வரவே கொள்ளையனும் கிணற்றில் குத்திதுள்ளான். கிணற்றில் விழுந்த கொள்ளையனை வெளியே மீட்ட பொதுமக்கள் அவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததில் படுகாயம் அடைந்தான். அவனை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன்றின்றி கொள்ளையன் இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மடத்திற்குள் புகுந்தது ஒரு நபர் என்றும் அந்த நபர் கனகவள்ளியின் நகைகளை பறிக்கும் நோக்கத்தில் வந்தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மடத்தின் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் கூறும்போது, மடத்தில் ஏராளமான நகை, பணம் உள்ளது. இதனை கொள்ளையடிக்கும் நோக்கில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் வந்தாக கூறினர். ஆனால் இதனை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை.
இதனிடையே மடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா வருவதாக இருந்தது. அதற்கு முன் இந்த அசம்பாவித நிகழ்வு நடைபெற்றதால் அவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.