வரும் 7ஆம் தேதிக்குள் கூடங்குளம் அணு உலை பணிகளை நிறுத்தாவிட்டால் 9 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினர் கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு உலையை மூடக்கோரி அண்மையில் கடலோர கிராம மக்களும், மீனவர்களும் இடிந்தகரை கிராமத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து, கூடங்குளம் அணு உலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி, அணு உலையை மூட மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரினர்.
போராட்டக் குழுவினரின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, உண்ணாவிரத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று 12 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் கூடங்குளம் அணு உலை பணியை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த அணு உலைக்கு எதிரான தீர்மானத்தை இன்று வரை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து இடிந்தகரை லூர்து மாதா ஆலய வளாகத்தில் நேற்று அணு உலைக்கு எதிரான கருத்தரங்கு நடைபெற்றது.
கூட்டத்துக்கு இடிந்த கரை பங்கு தந்தை செல்வகுமார் தலைமை தாங்கினார். அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த உதயகுமார் பேசுகையில், கூடங்குளம் அணு உலை பணிகளை நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை, மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வரும் 7ஆம் தேதிக்குள் அணு உலை பணிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இல்லையென்றால் 9 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வோம். அப்போது போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைவருடனும் பேசி கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.