கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரவாணிகளுக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாமை சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா தொடங்கி வைத்துள்ளார்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில் 26 நலவாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ளவர்களையும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நவம்பர் 14ஆம் தேதி வரை சென்னை மாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 89 பேர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 25,118 மீனவர் நலச்சங்க உறுப்பினர்களும், 827 ஊனமுற்றவர்களும், 136 நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க உறுப்பினர்களும், இதர நலச்சங்க உறுப்பினர்கள் 27,669 பேரும் அடங்குவர்.
அதுபோல அரவாணிகளுக்கான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மற்றும் பதிவு செய்யாத அரவாணிகளை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கான முகாமை சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய ஆட்சியர் ஷோபனா, 500 அரவாணிகள் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு அரவாணிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 228 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 500 பேர்களில் 350 அரவாணிகள் கலைஞர் காப்பீட்டு திட்ட சிறப்பு காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என்றார் ஷோபனா.