Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உறுப்பு தானம் செய்ய மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

உறுப்பு தானம் செய்ய மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (15:20 IST)
மனித உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் மியாட் மருத்துவமனையில் `மோட்' எனும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
webdunia photo
WD

உடல் உறுப்புகள் தானம் என்பது இன்று, நேற்றல்ல; நம் முன்னோர் காலந்தொட்டே இருந்து வந்திருப்பதை பல சான்றுகள், சரித்திரங்கள் மூலமாக அறிகிறோம் என்று கூறிய அவர், கண்ணப்ப நாயனார், சிவபெருமானின் கண்ணில் இருந்து குருதி வடிவதை அறிந்து கண்ணுக்கு கண்ணே மருந்து என்று கருதி அவரது கண்களை பெயர்த்து எடுத்து வைத்ததை புராணங்கள் மூலம் அறிகிறோம் என்றார்.

இன்றைய நவீன மருத்துவ உலகில், உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை என்பது பெருகி விட்டதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட தமது மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த டாக்டர் அசோகன்-டாக்டர் புஷ்பாஞ்சலி தம்பதியை நினைவு கூர்ந்து பாராட்டினார்.

அவர்களின் தியாகத்தை பாராட்டி தாம் திருக்கழுகுன்றத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதையும் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த அந்த தம்பதியர் வித்திட்ட செயல் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று, மோட் என்ற அமைப்பை உருவாக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் துணை முதல்வர் குறிப்பிட்டார்.

ஹிதேந்திரனின் தாயார் டாக்டர் புஷ்பாஞ்சலிக்கு கடந்த 15ஆம் தேதியன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கல்பனா சாவ்லா விருதினை அரசின் சார்பில் முதல் அமைச்சர் மு. கருணாநிதி வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மியாட் மருத்துவமனை டாக்டர் மோகன்தாஸ் குறிப்பிட்டார் என்றும், அதற்காக சமூக விழிப்புணர்வு நோக்கத்துடன் அவரது மருத்துவமனையில் மோட் அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதற்காக பாராட்டுகளையும், நன்றியையும் அரசின் சார்பிலும், ஒட்டுமொத்த மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

அதே நேரத்தில் இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு கடந்த 6, 7 மாதங்களுக்கு முன்பே டாக்டர் மோகன்தாஸ் அழைப்பு விடுத்த போதிலும், பல்வேறு காரணங்களால் தம்மால் தேதி ஒதுக்கித் தர முடியவில்லை என்றும், தற்போது அவரது தொடர் முயற்சியால் தாம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாகவும் துணை முதல்வர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவார்கள். அது என் விஷயத்திலும் உண்மைதான். என்னுடைய மனைவி துர்க்காவதி ஸ்டாலின் எனது வெற்றி என்பதை விடவும், எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று சொல்லிக் கொள்வதில் தாம் பெருமையடைவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் தனது மனைவி துர்க்காவதி முதல் நபராக உடல் உறுப்புகள் தானம் செய்திருப்பதை பின்பற்றி தாமும் உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவிப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். மோகன்தாஸ் வரவேற்றுப் பேசினார்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்க்காவதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றிப் பேசினார்.

மோட் அமைப்பின் நோக்கமும், ஆக்கமும் என்ற தலைப்பில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் தொடர்புத் துறை துணைத் தலைவர் பால் ராபின் எடுத்துக் கூறினார். மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் நன்றி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil