இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான நோன்புகளைத் தவறவிடக் கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.
இது குறித்து நபி மொழிகள்:
அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்டபோது, "அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் : "நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்." (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்டபோது "அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்" எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹ்ர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப் பற்றி இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்." (ஸஹீஹ் முஸ்லிம்)