தை முதல் நாள் பொங்கல் விழாவாக, தமிழர் திருநாளாக, சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடுகிறோம். சாதி, சமயம் அற்ற வகையில் தமிழ்நாட்டில் எல்லோரும் கொண்டாடி மகிழும் விழாவாக பொங்கல் அமைகிறது.பொங்கல் விழா, தமிழர்களின் அடையாள விழா. அறுவடை விழா, தேசிய ஒருமைப்பாட்டு விழா. இதை குறுகிய அளவில் இல்லாமல் பெரிய அளவில் கொண்டாடப்பட வேண்டும். கடமைக்காக கொண்டாடமல், பண்பாட்டு பழமை மாறாமல் உணர்வுடன் கொண்டாடப்பட வேண்டும்.நெல்லுக்கும், நீருக்கும் விழா எடுக்கும்போதெல்லாம், இந்த விழா கொண்டாடப்பட வேண்டும். பொங்கலுக்கு முந்தைய நாள் புது மண்பானையை கழுவி அதில் நிறைய நீர் ஊற்றி வைக்க வேண்டும். அப்படி செய்தால் மண்பானை அந்த நீரில் சிறிதளவை உறிஞ்சிவிடும். அதனால் பானை சற்று உறுதியாகிவிடும். பொங்கல் வைக்க தயாராகிவிடும்.அதுமட்டுமல்ல, வெங்கலப்பானை போல அல்ல மண்பானை. முற்றத்தில் அடுப்பு கூட்டி, அதில் பொங்கலிடும்போது, மண்பானையை அடுப்பில் வைக்கும்போது பொறுமையாக வைக்கவேண்டும். இல்லாவிடில் அது உடைந்துவிடும். இது எதற்காக என்றால் பெண்மைக்கு பொறுமை தேவை என்பதற்காகத்தான். தமிழர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் அர்த்தம் உண்டு. நன்மையும் உண்டு.இப்போது நிதிக்கரையோரம் கொண்டாடப்படும் பொங்கலை பார்ப்போமா......
தென் மாவட்டங்களில் பொங்கல் வந்தாலே குதூகலம்தான். கிராமங்களில் ஒவ்வொரு மக்களும் பொங்கலை ஒவ்வேறு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். சிலர் வீட்டிற்கு முன்பு மண்பானையை அழகுப்படுத்தி, கரும்புகளை அதன் அருகே வைத்து புத்தாடை அணிவித்து பொங்கல் வைப்பார்கள். அப்போது பொங்கி வரும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அவர்கள் பிறருக்கு கொடுத்து தானும் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
சில கிராமங்களில் நதிக்கரையில் பொங்கலை கொண்டாடி மகிழ்வது தனி சிறப்புதான். காலையிலேயே மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு, வண்டிகளில் நாலாபக்கமும் கரும்புகளை கட்டிக் கொண்டு பாட்டுப்பாடி வரும் ஸ்டைலே தனிதான். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு நதிக்கரையோரம் படை எடுத்த வண்ணம் வருவார்கள்.
வந்து இறங்கியதும் அவ்வளவுதான்! ஒரே குதூகலம் கொண்டாட்டம்தான். நதிக்கரையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரே நேரத்தில் பொங்கல் வைப்பார்கள். பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் விசேஷம் என்னவென்றால் ஒரே நேரத்தில் பொங்கல் பொங்கும் போது பெண்கள் படும் ஆனந்த சந்தோஷசத்தை இங்குதான் காணமுடியும்.
பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ... பொங்கல்... பொங்கலோ..... பொங்கல் சத்தமும், குலவை சத்தமும் நதியோரமே அதிரும். பின்னர் பொங்கல் சாப்பிட்டு, நதியோரம் உள்ள மணலில் விளையாடுவார்கள். காலையில் வரும் அவர்கள் மாலையில்தான் செல்வார்கள். அப்படி செல்லும் போது சீக்கிரத்தில் முடிந்து விட்டதோ என்ற சின்ன வருத்தம் இருந்தாலும் ஆனந்த கழிப்புடன்தான் செல்வார்கள்.
மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு நதியோரம் வந்து பொங்கல் கொண்டாடுவது தனி சிறப்புதான்... தனி அழகுதான். பொங்கலை போற்றுவோம்... பொங்கலப் போற்றுவோம்!
தென் சீமையிலே தாமிரபணி நதிக்கரையோரம் தான் இந்த காட்சியை காண முடியும். இன்றும் காணலாம். பொங்கலன்றும் கண்டுகளிக்கலாம்.