அதிகாலையிலேயே எழுந்து வயல் வேலைக்குச் சென்றிருந்த ராமசாமி உச்சி வெயிலில் மண்டை காய வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பினார். "ஸ்ஸ்ஸ்... அப்பாடா, உச்சி வெயில் மண்டையை பிளக்குதப்பா..." என்றபடி வீட்டு திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார்.
"என்னங்க ஆச்சு..." என்று பதற்றத்துடன் வந்த மனைவி கமலாவிடம், "முதல்ல ஒரு டம்ளர் மோர் கொண்டு வா. சீக்கிரம்" என்று விரட்டினார். "என்ன வெயில்... என்ன வெயில்..." என்றபடி தலையில் கை வைத்தபடி ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார்.
அப்போது அந்த தெரு வழியாக வந்துகொண்டிருந்தார் பூபாலன். ராமசாமியின் பால்ய நண்பர். அந்த ஊர் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க குடை பிடித்திருந்தார்.
அருகே வந்ததும், "என்ன வாத்தியாரய்யா, நம்ம வீட்டுப்பக்கம் வந்துட்டு போறது" என்றபடியே உள்ளே திரும்பி, "இரண்டு தம்ளருல மோரு எடுத்துட்டு வா" என்று வீட்டுக்குள் குரல் கொடுத்தார்.
ராமசாமி அழைப்பை ஏற்று, புன்னகைத்தவாறே அவரது அருகே வந்து திண்ணையில் அமர்ந்தார் பூபாலன்.
உள்ளேயிருந்து இரண்டு மோர் தம்ளருடன் வந்த கமலா, "வாங்கண்ணா, சவுக்கியமா?" என்று பூபாலனிடம் நலம் விசாரித்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.
என்னப்பா இந்த வேகாத வெயிலுல வெளித் திண்ணையில உக்கார்ந்திருக்க... என்ற படியே மோர் தம்ளரை கையில் எடுத்தார் வாத்தியார். அதற்குள் மோர் தம்ளரை காலி செய்திருந்த ராமசாமி "அப்பப்பா என்ன வெயில், வெயிலின் கொடுமை தாங்க முடிய்யல்ல. முன்னர் மாதிரி இல்ல இந்தக்காலம்..." என்று அலுத்துக் கொண்டார்.
"உண்மை தான் ராமசாமி. ஆனால் வெயில் கொடுமை அதிகமானதற்கு பொதுமக்களாகிய நாமளும் ஒரு முக்கிய காரணம் தெரியுமா!" என்று பீடிகை போட்டர்.
கேள்விக்குறியை பார்வையில் தேக்கியபடி, "என்னது நாம காரணமா?" என்றார் புரியாமல்.
"ஆமாம்ப்பா, நீயே பாரு! இன்றைக்கு இந்த நவீன இயந்திரமயமான உலகத்தில் எல்லோர் வீட்டிலும் குளிர் சாதனப் பெட்டி வந்தாச்சு. இதிலிருந்து வெளியான 'ப்ரியான்' என்கிற வாயு, வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் என்கிற வாயு மண்டலத்தை மெல்ல மெல்ல தாக்கி கொண்டிருந்தது. இப்போது அதில் ஓட்டையும் விழுந்து விட்டது" என்று ஆசிரியர் விளக்க ஆரம்பிக்க வாய் பிளந்த படி கேட்டுக்கொண்டிருந்தார் ராமசாமி.
ஆசிரியர் தொடர்ந்தார். "சூரியனின் வெப்பத்தில் இருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்கள் பல லேயர்களாக வடிகட்டப்படுகிறது. கடைசி லேயர் என்று அழைக்கப்படும் ஓசோன் படலத்தாலும் வடிகட்டப்பட்டு, கடைசியாக பூமியை வந்தடைகிறது. அப்படிப்பட்ட ஒரு ஓசோன் மண்டலத்தில் தான் தற்போது ஓட்டை விழுந்துள்ளது. இதனாலதான் நாம இப்போ அளவுக்கு அதிகமா வெயில் கொடுமைய அனுபவிக்க வேண்டியது இருக்கு"
"அடடா, இதுலோ இவ்வளோ விஷயம் இருக்கா" என்று ஆச்சரியப்பட்ட ராமசாமி, "ஏம்பா, இதை தடுக்க வேற வழியே இல்லையா?" என்றார் அப்பாவியாக.
"எல்லோரும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கணும்னு அரசாங்கம் பல வழியிலும் விழிப்புணர்வு பிரசாரம் செஞ்சுக்கிட்டுதான் இருக்கு. உலகத்துல வெப்பம் அதிகரிச்சிக்கிட்டு இருக்கறதுனால, பனிமலைகள் எல்லாம் உருகி கடல் மட்டமும் உயர்ந்துகிட்டு இருக்குன்னு உலக விஞ்ஞானிகளும் ஒருபுறம் எச்சரிச்சிக்கிட்டுத்தான் இருக்குறாங்க. இந்த நேரத்தில் பொதுமக்களாகிய நாமதான் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கணும் ராமசாமி. இத நான் ஒனக்கும் மட்டும் சொல்லல. நம்ம கிராமத்து மக்கள் எல்லோருக்கும் தான் சொல்லுறேன்".
அதற்குள் அங்கு ஒரு கூட்டமே கூடியிருக்க, ராமசாமிக்கும் ஆசிரியர் பூபாலனுக்கும் இடையேயான ஒரு கலந்துரையாடல் ஒரு மினி சொற்பொழிவு ரேஞ்சுக்கு மாறிவிட்டிருந்தது. ஆசிரியரின் அறிவுரையை எல்லோரும் ஆர்வமாக கேட்டுகொண்டிருந்தனர்.
ஆசிரியரும் உற்சாகமாக தொடர்ந்தார். "இதன் முக்கிய அம்சமாக நாம் குறிப்பிடுவது 'பழையன கழிதலும், புதியன புகுதலும்'ங்கிறத பத்திதான். இதை பலபேரு தப்பா புரிஞ்சிக்கிட்டு பழைய துணிமணிகள எரிப்பது, டயர்களை கொளுத்துவதுன்னு சுற்றுச் சூழலை கெடுக்கிற மாதிரியான வேலைகள செஞ்சிக்கிட்டு இருக்கோம்".
"இதனால சுற்றுச் சூழல் பெரிய அளவில் மாசு அடையிறதனாலதான் வெப்பமும் அதிகமாக இருக்கு. அதனால் இந்த வருச பொங்கல்ல இருந்து சுற்றுச் சூழல் கெடாமல் பாதுகாத்து இனிமையான பொங்கல நாம கொண்டாடுனோம்னா நமக்கும் சந்தோஷம். சுற்றுப்புறமும் பாதிக்காது" என்றவர், சிறிது நிறுத்தி "என்ன, நான் சொல்லுறது எல்லோருக்கும் புரியுதா" என்றார்.
'ஆமா வாத்தியாரய்யா" என்றனர் கூட்டத்தினர் கோரஸாக.
"ரொம்ப சந்தோஷம், எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்றபடி புறப்பட்டார் ஆசிரியர் பூபாலன்.