Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமத்துவம் வளர்க்கும் பொங்கல் பண்டிகை!

- மு.பெருமாள்

Webdunia
சனி, 12 ஜனவரி 2008 (16:28 IST)
webdunia photoWD
நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு.

ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை.

காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாக கொண்டதாக இருக்கும்.

ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே!

உழைப்பை போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும்... அவ்வளவு ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் பண்டிகை.

தமிழகத்தில் பொங்கல்!

தமிழகத்தில் உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை உழைப்பை போற்றும் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 4 தினங்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்...' என்பதற்கேற்ப போகித் தினத்தில் பழையப் பொருட்களை தீயிட்டு எரித்து அழிக்கின்றனர். வீடுகளுக்க்கு புது வண்ணம் பூசி, புதுப் பொருட்களை சேர்க்கின்றனர்.

இதன் மறுநாள் பொங்கல் பண்டிகை. புதுப்பானையில், புது அரிசியிட்டு கரும்பு, கிழங்கு மற்றும் அனைத்து வகை காய்கறிகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். இதை சூரியக்கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.

3 வது நாள் மாட்டுப்பொங்கல். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் இது. அன்று அதிகாலையிலேயே, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி அவற்றுக்கு பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

இறுதி நாளாக கொண்டாடப்படும் காணும் பொங்கல் மற்றொரு முக்கிய அம்சம். இன்றைய தினத்தில் அனைவரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து கல்ந்துரையாடும் நாள். இதன்மூலம் உறவுகள் வலுப்படுகிறது.

பெரும்பாலான ஊர்களில் இன்றைய தினத்தில்தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், பெண்களுக்கு என சில பிரத்யேக போட்டிகள் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி.

இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் எங்கு நடந்தாலும், ஜாதி மத பேதமின்றி அனைவரும் இதில் பங்கேற்று மகிழ்கின்றனர். முன் விரோதம், கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பவர்கள் கூட இந்த தினத்தில் ஒன்றிணைந்து போட்டிகளில் பங்கேற்று மகிழ்வதை காண முடியும். ஜாதி, மத, இன, மொழி என எந்த வேறுபாடுகளுக்கும் இந்த பொங்கல் விளையாட்டு களத்தில் இடமில்லை என்பது கண்கூடு.

பொதுவாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்படித்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது, சமத்துவம் வளர்கிறது என்றாலும் வேறு சில மாவட்டங்களில் நடைபெறும் விசேஷ அம்சங்கள் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றில் சில:

' ஜல்லிக்கட்டு' பொங்கல்!

webdunia photoWD
மதுரை பொங்கல் இந்தியா மட்டுமல்ல, உலக பிரசித்தம். காரணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. மதுரை மாவட்டம் பாலமேட்டில் தை மாதம் 2ம் தேதியும், அலங்காநல்லூரில் தை 3ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உலகம் முழுவதிலுமிருந்தும் ரசிகள் வந்து குவிவதைக் காணலாம்.

இந்த பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக, ஆண்டு முழுவதும் மாடுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருவது இப்பகுதி மக்களின் வழக்கம். அவர்களை பொருத்தவரை இது ஒரு கவுரவமும் கூட.

இதற்காக, நல்ல இனத்தை சேர்ந்த மாடுகளை கன்றுகளாக இருக்கும் போதே வாங்கி வளர்ப்பர். தினமும் பச்சரிசி மற்றும் சின்ன பருத்திக்கொட்டை கலவையை அரைத்து கொடுப்பர். தினந்தோறும் 50 லிட்டர் வரை தண்ணீர் கண்டிப்பாக உண்டு. இதன் மூலம் இளம் பருவத்திலேயே காளை மாடுகள் தெம்பாக வளரும். அதோடு, தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த காளைகளுக்கு சண்டை பயிற்சியும் உண்டு. அதாவது, மனித உருவில் ஒரு பொம்மையை தயார் செய்து அதை வேகமாக குத்திக் கிழிக்கும்படி மாடுகளுக்கு தினமும் பயிற்சி அளிப்பர்.

இதில் சின்னாபின்னமாகி சரியும் மனிதப் பொம்மையின் வயிற்றுப்பகுதியில் இருந்து சிவப்பு நிறத்தில் ஒரு இனிப்புக்கலவை வெளியே வரும்படி செய்வர். இதை அந்த காளைகள் ரசித்து சுவைக்கும். இதன் மூலம் காளைகளுக்கு உருவாகும் வெறிதான், ஜல்லிக்கட்டு களத்தில் தன்னை அடக்க வரும் இளம்காளையர்களை கொம்புகளால் தூக்கி அலாக்காக வீசியெறிவதற்கு காரணம்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒரு வீர விளையாட்டாக மட்டுமே எடுத்துகொள்ள முடியாது. அவை சமத்துவம் வளர்க்கும் ஒரு நல்ல விழாவும் கூட.

காளையை அடக்கும் வலு படைத்த எந்த இளம் காளையரும், எந்த ஜல்லிக்கட்டிலும் களம் இறங்கலாம். ஜாதி, மத பேதம் எதுவும் இதில் கிடையாது என்பதுதான் இதற்குக் காரணம்.

இரு கிராமங்களுக்கு இடையே, இரு பிரிவினருக்கு இடையே முன் விரோதங்கள் இருந்தால் கூட, அவர்களை கருத்து ஒருமித்து சேர்த்து வைக்கும் ஒரு களமாகவே ஜல்லிக்கட்டுகள் திகழ்கின்றன.

சமத்துவம் வளர்க்கும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் போன்ற பல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. (இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருப்பது இந்த மாவட்ட மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.)

' சண்டைக்கோழி' பொங்கல!

webdunia photoWD
காளைகளுடன் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவுக்கு பிரபலம் கொண்டது கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சேவல் சண்டை விளையாட்டு.

இங்குள்ள பூலாம்வலசு கிராமத்தில் தான் இந்த சேவல்சண்டையை பார்க்க சுற்றுவட்டார கிராமமே வந்து காத்திருக்கும்.

சுமார் 2 கிலோ எடையுள்ள சேவல்களை தேர்வு செய்து, தினந்தோறும் கம்பு, சோளம் என ஆரோக்கியமான தீவனங்களை கொடுத்து வளர்க்கின்றனர். தினந்தோறும் 1 மணி நேரம் பிற சேவல்களுடன் மோதவிட்டு சண்டை பயிற்சி அளிக்கின்றனர். தண்ணீரில் முக்கி எடுத்து கோழிகளை களத்தில் இறக்கும் போது, அவற்றின் ஆக்ரோஷம் எதிரில் நிற்கும் கோழிகளை கொத்தி கிழித்துவிடும்.

பொங்கல் தினத்தில், இந்த கோழிகளின் கால்களில் கத்திகளை செருகி, களத்தில் இறக்குகின்றனர். ஆக்ரோஷமாக ஆரம்பிக்கும் இந்த சண்டை, பல நேரங்களில் மணிக் கணக்கிலும் நீடிக்கும்.

இறுதியில் வெற்றி பெறும் சேவல் பரிசுகளை குவிக்கும். போராடி தோற்கும் சேவல், கறிச்சட்டியில் குழம்பாக கொதிக்கும்.

இது பார்வையாளர்களை பொருத்தவரை வெறும் கோழிச்சண்டையாக இருந்தாலும், நிஜத்தில் மனிதர்களிடையே சமத்துவத்தை வளர்க்கும் ஒரு நல்ல பண்டிகை!

காரணம், இந்த போட்டிகளில் பங்கேற்பவர்களிடையே எந்த பாகுபாடும் கிடையாது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சியில் , பரம்பரை எதிரிகள் கூட விரோதத்தை மறந்து நண்பர்களாக, சகோதரர்களாக மாறிய கதை நிறைய உண்டு.


' ரேக்ளா' பொங்கல்!

லால் குடியில் நடக்கும் ரேக்ளா போட்டிகளும் உலகப் பிரசித்தம். இங்கு காளைகள், குதிரைகள் பூட்டிய ரேக்ளா போட்டிகளுடன் மின்னல் வேகத்தில் வீரர்கள் பறக்கும் பைக் ரேஸும் திரில்லான அனுபவம்.

அதனால் தான் இங்கு நடைபெறும் போட்டிகளை 'முப்பெரும் வீரவிளையாட்டுகள்' என்றே அழைக்கின்றனர்.

இங்கு பங்கேற்கும் காளைகள், குதிரைகளுக்கு எப்படி ஜாதி, மத வேறுபாடு கிடையாதோ அதேபோல் தான் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும் எவ்வித பாகுபாடும் கிடையாது.

நீண்ட நாள் பகை கொண்ட இரு தரப்பினர் ஒன்று சேர வேண்டுமெனில், இரு போட்டிகளில் கலந்துகொண்டால் போதும், தானாகவே ஒன்று சேர்ந்து நட்புகொண்டுவிடுவார்கள் என்பது நடைமுறை உண்மை.


சுயம்வர பொங்கல்!

கொங்கு மண்டலமான கோவையில் கொண்டாடப்படும் பொங்கல், சமத்துவத்தை மட்டுமல்ல திருமண உறவுகளையே உருவாக்கும் அளவுக்கு பெருமை பெற்றது.

காரணம், இந்த மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருப்பராயன் கோயிலில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வழிவைத்து வழிபடுவர். அப்போது, இளம் பெண்களுக்கு கருப்பராயன் சாமி திருமண வரம் கொடுப்பார் என்பது மூத்தோர் நம்பிக்கை.

அதே நேரத்தில் கோயிலின் மற்றொரு புறத்தில் இளம் காளையருக்கான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறும். இதில் வெற்றிபெறும் காளையருக்கு ஏராளாமான பரிசுகள் குவியும்.

கன்னியரும், காளையரும் ஒரே இடத்தில் கூடி பொங்கல் கொண்டாடும் போது, சாமி வரம் கொடுக்கிறாரோ இல்லையோ, திருமண வரம் கிடைப்பது மட்டும் நிச்சயம்!

பொங்கல் பண்டிகை சமத்துவத்தை வளர்க்கும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டுமா, என்ன...?

வெளிமாநிலங்களில் பொங்கல்!


உறவுகளை வளர்க்கும் இந்த பொங்கல், வட மாநிலங்களில் 'சங்கராந்தி' என்ற பெயரில் கோலமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் அறுவடைத் திருவிழாவாகவும், உழைப்பின் பெருமையை போற்றும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

நம்மூரில் ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டைகள், ரேக்ளா ரேஸ் போன்று, வட மாநிலங்களில் பட்டம் பறக்கவிடுவது மிகப்பெரிய போட்டியாக கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலும் இங்குள்ள மக்கள் கடற்கரை, பொது மைதானங்கள் போன்ற இடங்களில் கூடி போட்டி போட்டுகொண்டு பட்டம் பறக்கவிடுகின்றனர்.

அன்றைய தினத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கூட பட்டங்கள் பறந்துகொண்டிருப்பது கண்கொள்ளா காட்சி.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜனவரி 14ம் தேதி 'சர்வதேச பட்டம்விடும் திருவிழா'வாகவே கொண்டாடப்படுவது சிறப்பான அம்சம்.

இந்த விழாக்களின் மூலம், பட்டம் பறக்கிறதோ இல்லையோ, அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் இறக்கை கட்டி பறக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், உ த்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்மூலம் சமத்துவம் பொங்குகிறது.

வெளிநாடுகளில் பொங்கல்!

உழைப்பை போற்றும் பண்டிகை என்பதால் வெளிநாடுகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், பண்டிகையின் பெயரும், கொண்டாடப்படும் தேதியும் தான் மாறுபடுமே தவிர, பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் சமத்துவம் வளர வேண்டும் தான்.

அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சீனா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டை நாடான இலங்கை போன்ற நாடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் பொங்கல் தனி சிறப்பு பெற்றவை.

முடிவாக...

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை சமத்துவத்தை மலரச் செய்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே, இந்த இனிய பொங்கல் திருநாளில் பொங்கல் பொங்கட்டும். ஜாதி, மத பேதம் நீங்கி சமத்துவம் வளரட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?