பூக்கள்
எப்படி அது நடக்கப் போயிற்று
ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை
சுமுகமாய் இருந்தது
ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய்
ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய்
ரொம்பவும் நேசத்துடனே
இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது
இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய்
பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை
அப்படியே பார்த்துக் கொண்டாலும்
பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய்
முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக
கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது
கோபம் பழைய கணக்குகளைப் போடும்
போன மாதம் நான் என்ன பேசினேன்
அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது
குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும்
அப்புறம் வழியே தெரியாமல் போகும்
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது
சத்தமே போடாமல் கண்களை மூடிக்கொண்டு
கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால்
காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும்
இலைகள் துளிர்த்துப் பசுமையாகி
பூக்கள் மறுபடியும் பூக்கும் அதே இனிய வாசனையோடு
காலை மணி ஆறு
எதிர் வீடு தூங்கும் போது
படிகளில் கால் பரப்பி விழித்திருந்து
தெருப் பெருக்கித் தண்ணீர் தெளிக்க
ஒதுங்கியிருந்து வழிவிட்டு
வரப்போகும் சாதத்தித்ற்கு
வால் குழைத்துக் காத்திருக்கும் நாய்
பக்கத்துத் திண்ணையில் சத்தமாய்ப்
பேசிக் கொள்ளும் இரண்டு
சிட்டுக்குருவிகள்
உடல் சிலிர்த்து தலை அசைத்து
குப்பைக் கிளறித் தீனி
தேடிடும் செங்கல் நிறப்பசு
தினசரியைப் பிரித்து
எஙோ நடக்கும் கொலைகளில்
ஆழ்ந்து போகும் நான்