பலநூறு மொக்குகள் மலர
புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி
முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும்
முணுமுணுத்தது தனித்தனி மொழியில்
தானாகக் கண்டறிந்து சேர
வழிகேட்டது
கூந்தலுக்கும் கோயிலுக்கும்
தோட்டத்தைச் சுற்றி
இலைகளாய்ச் சிதறின
சொல்சொல் என
அவை முன்வைத்த வேண்டுகோள்கள்
ஆளற்ற வெளியில் பரிதவிக்கும்
பார்வையற்றவர்களென
காற்றின் திசைகளில் விடைவேண்டி
கைதுழாவி நடுங்கிக் களைத்தது
காலம் சற்றே கடந்தாலும்
ஒப்பந்தப்படியும்
உரிமைப்படியும்
பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள்
போகுமிடம் தெரியாத
இழப்பின் வலியில்
கிளைகழற்றிக் குமுறியது செடி
நாலுவேலி நிலம்
இன்றைய புறநகர்
அன்றைய வயல்வெளியாய்
விரிந்து கிடந்த நாட்களில்
விளையாடிக் களித்தவன் நான்
ஏரிப் பாசனத்து நீரை
இரவு முழுக்கக் காவல்காத்து
மடைமாற்றிப் பயிர் வளர்த்தவன் நான்
தவளைச் சத்தத்திலும்
நிலாசொன்ன கதைகளை
நின்று கேட்டவன்
கதிர்முற்றிக் கனிந்த காலத்தில்
பனிக்குச் சாக்குப்பை போர்த்தி
காவல் காத்ததும் நானே
உழைக்கும் மிஞ்சாத கணக்கில்
முதுகில் கவிந்த சுமை தாளாது
மனம் வெதும்பிப் போனேன்
அவரசரதுக்கும் அவசியத்துக்கும்
துண்டுதுண்டாக விற்றுத் தின்றதில்
பாதியை இழந்தேன்
மீதியைத் தொலைத்து
அதிர்ஷ்டமானைத் துரத்தியதும்
நகர்வனத்தில் சிறைப்பட்டதும்
எல்லாருக்கும் தெரிந்த கதை
இறந்த காலத்தில்
இழந்த செல்வத்தின்
நினைவுகளை அசைபோட்டபடியும்
நமக்கும் இருந்ததப்பா
நாலுவேலி நிலம் என்று
பேரப்பிள்ளைகளிடம் விவரித்தபடியும்
வீட்டுத் தொலைக்காட்சியில்
வயலும் வாழ்வும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்