ஒவ்வொருவரிடமும்
நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும்
குறைந்தபட்சம்
சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும். . .
காட்டு வழியில் எதிர்வரும் வேளை
யானையிடம்.
கோவில் மதில் மீதிருந்தோ
மரக்கிளையிலிருந்தோ
இறங்கி வந்து
வாழைப்பழத்துக்காகக் கை நீட்டும் போது
குரங்கிடம்.
அங்கே இங்கே உட்கார்ந்து
திருப்தியடையாமல்
படிக்கவென்று மேஜை மீது திறந்துவைத்த
புத்தகத்தில் உட்காரும் வேளை
வண்ணத்துப பூச்சியிடம்.
இப்படி இப்படி. . .
ஆனால்,
ஒரு குழந்தையிடம் சதாசர்வகாலமும்
வினயம் காட்ட வேண்டும்.
இல்லாது போனால்,
(எக்கணம் எனச் சொல்ல முடியாமல்)
ஓர் ஆனந்தக் காட்சியை
இழக்கக் கூடும்.
உடல் மீட்டல் : பிரம்மராஜன்
நித்தியத்திற்குமாய் விளையாடவும்
மரப்பாச்சியை விடவும் சுதந்திரமாய் என்னுடலை
உனக்கு விளையாடத் தந்து விட்டு
சென்றிருப்பேன்
ஹயவதனன் முகம் லகானுக்கேங்கிது போல
கரப்பான்பூச்சி மீசைக்காரன் காளை விற்க
வந்திருந்தான்
மலம் விற்ற வெள்ளிகளை சைபர் பணமாக மாற்றி
எழுதியபடியிருந்தான்
தட்டைப் பிரபஞ்சத்திலிருந்து ஓநாய்
ஓயாதிருந்தது ஊளையாய்
சொல்லும் புராதனச் சேதி பொன்னுக்கேங்கி
அயலான் தான்தான் அசலான் என்றபடி
ஓலைபதிக்கிறான்
குள்ளன் நட்சத்திரம் ஒன்று சந்திரசேகரின் எல்லைக்குள்
வெடித்து பஸ்பமாகிறது.
என் தலையிலிருந்திறங்கி
நெஞ்சின் நடு ஓடையில் வழிந்த
விந்து கமழ்கையில்தான்
மீண்டம் நாதமேங்கி
உன்னூர் சேர்கிறேன்
உடல்
மீட்டுக் கொள்ள
ஒரு சுரை என் மீது படரவும்
தாகசாந்திக்காய்
நாயொன்று என் வியர்வையைச்
சுவைக்கவும்.
குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன்
கூடுகட்ட விடமாட்டேன்
சின்னக் குருவியே! என் வீட்டு
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம்
பருவக் காற்றுகள் உள்ளே வர
எஞ்சிய உணவின் வாசம் மறையவும்
துவைக்கப்படாத
துணிகளின் வாடை போகவும்
இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று
தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும்
பருவக்காற்றுகள் உள்ளே வீசத்
திறந்துள்ளன எனது சன்னல்கள்
எனது வீட்டுக்குள் வருவோர்
தனது வாசத்தோடு வந்து போகிறார்
திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம்
விட்டு விட்டே போகிறார் தெரியுமா?
சன்னல் வழியே சிறகை மடக்கி
வர முயலாத சின்னக் குருவியே
கூடு கட்டப் பொருந்தி இடங்கள்
இல்லை குருவியே எனது வீட்டில்
நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம்
என்ன ஆயின? நீயேன் கூட்டை
வீட்டுக்குள் கட்ட வளைய வருகிறாய்?
வெள்ளிக் கிழமை விஜயம் செய்யும்
சாம்பல் பூனையா கண்ணெதிரில்
ஆள் இருக்கவும் உள்ளே நுழையும்
கிழமை பாராட்டாத பெரிய எலியா
புறப்படும் போது தோள் மேல் குதிக்கும்
செவ்வாய்ப் பல்லியா எது உனக்குப்
பரிந்துரை செய்தது எனது வீட்டை
வீட்டில் மனைவியோ தாயோ கட்டிக் கொடுத்த
பொட்டலத்து மதிய உணவை
ஓட்டலில் வைத்து சாப்பிடும் நடுத்தர
வர்க்கத்து உழைப்பாளி போல எனது
வீட்டுக்குள் புழு பூச்சிகளைக்
கொணர முயல்கிறாய் சின்னக் குருவியே
வெளியிடத்து உணவுக்கு அனுமதி இல்லையென
பலகையில் எழுதிப் போடவா குருவியே
கூடு கட்ட விடமாட்டேன்
சின்னக் குருவியே! என் வீட்டு
சன்னல்கள் திறந்திருக்கக் காரணம்
பருவக் காற்றுகள் உள்ளே வர.