கனவில் கிடைத்த மூன்று கற்களில்
முதல் கல்லை வீசினேன்
சூரியனை நினைத்தபடி
பார்வையால் பொசுக்கும் வேகத்துடன்
பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான்
இழுத்து வந்த குதிரைகள்
இரைத்த படி மூச்சுவாங்கின
வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில்
வேர்வை வழிந்தது
தாகத்துக்கு அருந்த
இளநீரை நீட்டினேன்
ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில்
வெற்ற்லை பாக்கு போட்டபடி
வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான்
காற்றை நினைத்தபடி
இரண்டாம் கல்லை வீசினேன்
விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே
விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன்
முகம்பார்க்க முடியவில்லையே என்றதும்
உடல்சுருக்கி எதிரில் சிரித்தான்
இளநீரை விரும்பிப் பருகிய பின்னர்
ஏராளமான கதைகள் சொன்னான்
ஒவ்வொரு மூச்சும்
ஒவ்வொரு ராகம்
அவன் உடலிலிருந்து வீசியது
பச்சைக் குழந்தையின் பால்வாடையும்
மரணத்தின் வாடையும்
மூன்றாவது கல்லை வீசி
சந்திரனைக் கூப்பிட்டேன்
பால்வீதியின் படியிறங்கி
தரைக்கு வந்தான் சந்திரன்
பார்த்ததுமே ஒருவர் மீது ஒருவருக்கு
ஆழ்ந்த நம்பிக்கை பிறந்துவிட்டது
காலம் காலமாகப் பழகிவரும் நண்பர்கள் போல
கைகுலுக்கிக் கொண்டோம்
கட்டிப் பிடித்துக் கொண்டோம்
அருந்தக் கொடுத்த இளநீரை
ஆசையோடு வாங்கிப் பருகினான் அவன்
உனக்கு ஏதாவது வேண்டுமா என்று
ஆவலுடன் கேட்டான்
வீசிய மூன்று கற்களும்
மீண்டும் கிடைக்குமா என்றேன்
அமாவாசைஅன்று
கொண்டு வந்து தருகிறேன் என்றபடி
அவசரமாகப் போய்விட்டான்
எந்த அமாவாசை என்று
அவனும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை