நன்றி : மண்ணுள்ளிப் பாம்பு
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்,
கோவை - 1.
விலை : ரூபாய் 30/-
பூசணி
மத்தன்
பரங்கி
அரசாணி
காய்தான் எல்லாம்
கொடுங்கோல்
செங்கோல்
குடியரசு
மதச்சார்பற்ற மக்களாட்சிப் பனம்பழம்
யாவற்றின்
நிறம் சுவை
நாற்றம் ஒன்றே
----
உன்னால் முடியாது
விலகி நில்
முடியுமானால்
இரண்டு நீயும் போடு
அடிவாங்குபவன் சார்பில்
நிற்பது அபாயம்
----
தொடுவானம்
ஆட்சித் தலைவரின் அருகில்
நின்று
மடித்த மனுவைக் கொடுக்கும்
இருட்டின் முகத்தில் எத்தனை வெளிச்சம்
தொடும் தூரத்தில் நின்றதை
சிறுகண் ஒளிர
சிலம்பித் திரிகையில்
மடித்த மனுவோ
கீழ் நோக்கிய பயணாய்
தரை தொடாமல்
இருட்டுக்கு அறிவு விடியும்
அகாலத்தில்
சின்ன இருட்டின்
சிந்தனையில்
தொடுவானம் துலங்கும்
ஞானோபதேசம்
பொய்யின் மொழி பேசு
தாயின் கோயிலில் திருடு
பேரிளம் பெண்ணையும் கற்பழி
சகமனித உதிரம் உறிஞ்சு
பிள்ளைக்கறி சமைத்துண்
பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக்
கருக்கு
கொலைத் தொழில் பழகு
உயிர் மருந்தில் ஊழல் செய்
செய்க பொருள்
வையத் தலைமை கொள்
வாழ்வாங்கு வாழ்வாய் காண்.
கவிதைகள் : நாஞ்சில் நாடன்
நன்றி : மண்ணுள்ளிப் பாம்பு
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்,
கோவை - 1.
விலை : ரூபாய் 30/-
சொல்லில் முடியாத சோகம்
இரவெலாம் விழித்து
அடர்மழை பொழியும்
காலையில்
எழுதி முடித்தான்
நோபல் பரிசின் ஏற்புரை
படைப்பை இனிமேல்
யோசிக்கலானான்
----
ஆணைக்கு முன்னால் பதினாறு பேர்கள்
தரையோடு தரையாய் நின்று கொண்டிருந்தனர்
இருபத்திரண்டு பேர் ஐம்படைத்தாலி
மண்ணில் உராயும் உயரம் அளவில்
மீதிப்பேரை அண்ணாந்து பார்த்தால்
சுளுக்கும் கழுத்து
அவரையும் சற்று அளந்தால் என்ன
ஆணை சிலரை அளந்தது முட்டுக்கு மேலே
சிலரை அளந்தது தோள்பட்டை வரை
சிலரை அளந்தது குறுக்கு வாட்டில்
ஐயோ தாங்கொணாக் குள்ளம் என்றது
---
வேர்கள்
அவசரத் தந்தி
வியர்வையில் ஊற
ரயிலுக்கு அலைகையில்
ஆங்கோர் சல்லிவேர்
புறக்கடை ஓரம்
துடுப்புக் குழிக்குத்
தோண்டக் குனிந்தால்
தோன்றும் ஒன்று
வரிசையில் எங்கு
நின்றிருந்தாலும்
இயல்பாய் நுழையும்
இழைபோல் ஒன்று
நியாயத்திற்குப் பாயும்
மடையை
மறித்துக் குறுக்கே
கிடக்கும் ஒன்று
பல்கலைக்கழகப் பாதையில் ஒன்று
கர்பக்கிரக மூலையில் ஒன்று
மருத்துவமனையின் மாடியில் ஒன்று
காவல் நிலையச் சுவரில் ஒன்றென
சீமைக் கருவை போல்
அடர்ந்தும் படர்ந்தும்
ஈரம் உறிஞ்சும்
வேர்கள் எங்கும்
எதிர்ப்பு
பொருத்தாப் புகைப்பான் உதட்டில் நிற்க
ஓடி ஏறுவர்
கடைசி இழுப்பை ஒங்கி எறிந்து
துள்ளி ஏறுவர்
விரையும் படியில் ஓய்வாய் நின்று
உறிஞ்சி ஊதுவர்
எவன் கேட்க இருக்கிற தென்றும்
குனிந்தும் ஒளிந்தும்
புகையாய்ப் பெருக்குவர்
என் போல் பயணியர்
இருமலை மட்டும் எதிர்ப்பாய்
சொல்வார்.