பாஜக தலைவர் ஒருவரின் இந்த விமர்சனத்தை அவரது சகோதரி, மகள் குறித்தானதாகவே நான் கருதுகிறேன். காரணம், என்னை நாடு முழுவதும் மக்கள் சகோதரியாகவே கருதுகிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பணத்துக்கு கட்சி பதவிகளை விற்பதாகவும், விபச்சாரத்திலும் அவ்வாறே பணம் செலுத்திய பிறகே அர்ப்பணிப்பு நிகழ்கிறது என்றும் கன்சிராமின் கொள்கையை விற்று விட்டு விபச்சாரியை விட மோசமாக செயல்படுகிறார் என்றும் கூறியிருந்தார்.
பாலியல் தொழிலாளியை மாயாவதியை ஒப்பிட்டது குறித்த தயாசங்கர் சிங்கின் விமர்சனம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, பாஜக தலைமை பாஜக துணைத் தலைவர் பதவியில் இருந்து தயாசங்கர் சிங்கை நீக்கி நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், தயாசங்கர் சிங்கின் விமர்சனம் குறித்து மாயாவதி கூறுகையில், ”பாஜக தலைவர் ஒருவரின் இந்த விமர்சனத்தை அவரது சகோதரி, மகள் குறித்தானதாகவே நான் கருதுகிறேன். காரணம், என்னை நாடு முழுவதும் மக்கள் சகோதரியாகவே கருதுகிறார்கள்.
இதுபோன்ற கருத்துக்களைக் கூறுவோரை பாஜக மன்னிக்கக் கூடாது. குஜராத்தில் இதுபோன்ற தலித்துகளுக்கு எதிரான விவகாரம் பரபரப்பாகி உள்ள நிலையில், பாஜகவிடம் இருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.