நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு மூன்றாவது அணி காங்கிரஸ் ஆதரவுடன் நிலையான ஆட்சி அமைக்கும் என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போதுள்ள தேர்தல் நிலவரப்படி பாஜக ஆட்சியமைக்க தேவையான எம்.பி.க்கள் பலம் கிடைக்காது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், காங்கிரஸ் கட்சியும் பலவீனமடைந்துவிடும். மூன்றாவது அணியில் இணைந்திருக்கும் கட்சிகள் அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.
இதற்கு முன்பு மூன்றாவது அணி ஆட்சி அமைத்தபோதெல்லாம் அது நிலையான ஆட்சியை வழங்கவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தற்போது நாட்டில் ஜனநாயகம் முதிர்ச்சியடைந்துள்ளது. என்.டி.ஏ மற்றும் யு.பி.ஏ நிலையான ஆட்சியை வழங்கியது போல் தற்போது மூன்றாவது அணியும் ஆட்சியமைக்கும்” என தெரிவித்தார்.
“சமாஜ்வாடி கட்சியின் சிந்தனையாளரான ராம் மனோகர் லோகியா, காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும்போதெல்லாம் சமாஜ்வாடிக்கு ஆதரவளிக்கும் என கூறியுள்ளது போல் தற்போது அக்கட்சி பலவீனமாக உள்ளது. எனவே அது எங்களுக்கு ஆதரவளித்து மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைக்க ஆதரவு தரும் என நம்புகிறோம்” என்று அகிலேஷ் உறுதி பட தெரிவித்தார்.