வன்முறை நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என அறியப்பட்டவர்கள் தண்டனையின்றி தப்பிவருகின்றனர் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் 18 எம்.பி.க்கள், சபாநாயகர் பவுல் ரயானுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அதில், “இந்தியாவில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர் மற்றும் சீக்கியர் உள்ளிட்ட மதசிறுபான்மை சமூகத்தினர் வன்முறைகளை சகித்து வருகின்றனர். பல தசாப்தங்களாக துன்புறுத்தல்களை சகித்து வருகின்றனர். அவர்கள் இது போன்ற சூழ்நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என அறியப்பட்டவர்கள் தண்டனையின்றி தப்பிவருகின்றனர்” என்று ட்ரென்ட் பிராங்க்ஸ் மற்றும் மெக்கல்லம் தலைமையிலான எம்.பி.க்கள் எழுதியுள்ளனர்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அவர்கள் சபாநாயகர் பவுல் ராயனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எம்.பி.க்கள் எழுதியுள்ள இக்கடிதத்தில் இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றும் மக்களை இடமற்றும் சூழ்நிலைக்கு தள்ளிய வன்முறை சம்பவங்கள் தொடர்பான தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.