உத்திர பிரதேச மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் இந்த நிலையில் உபி தலைநகர் லக்னோவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், பயங்கரவாதிகளின் சதியை முறியடிக்க, துப்பாக்கிச்சூடு நடந்தியதாகவும், இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பயங்கரவாதிகளை உயிருடன் பிடிக்க அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து நாட்டின் பல பகுதிளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் 5 பேரும், கான்பூரில் ஒருவரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ்., தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள பயங்கரவாதி சைபுல்லா லக்னோவில் பதுங்கியிருப்பதாகவும், அவன் மத்திய பிரதேச ரயில் விபத்து சம்பவத்திலும், உஜ்ஜய்னி ரயில் விபத்திலும் தொடர்பு உள்ளவன் என்பதும் தெரியவந்தது. அவனை உயிருடன் பிடிக்க, பயங்கரவாத எதிர்ப்புபடையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சைஃபுல்லா சுட்டுக்கொல்லப்பட்டான். தற்போதும் அங்கு துப்பாகி சூடு நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து உ.பியின் டிஜிபி ஜாவித் அஹமது தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.