இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறித்து காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நிலையில் இருநாடுகளிடையே போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
பொதுவாக போர்க்காலத்தில் பிற நாடுகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினாலும், போர்நிறுத்தத்தை போரை நடத்தும் நாடுகள் அறிவிப்பதே வழக்கம் என்றும், ஆனால் இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா அறிவிப்பை வெளியிட்டுள்ளது புதுமையாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாம் எக்ஸ் பதிவில் “"வளரும் நாடாக இருப்பதால், நமக்கு முதுகெலும்பு நேராக உள்ளது, அனைத்து அட்டூழியங்களையும் எதிர்த்துப் போராட போதுமான மன உறுதியும் வளங்களும் உள்ளன.
3-4 ஆயிரம் மைல்கள் தொலைவில் அமர்ந்திருக்கும் எந்த நாடும் இந்தியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கக்கூடிய காலம் கடந்துவிட்டது" இந்திரா காந்தியை இன்று இந்தியா மிகவும் மிஸ் செய்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.
அதுபோல கேரள காங்கிரஸும், இந்திரா காந்தி பேசிய வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் சமயத்தில் இந்திரா காந்தி பேசுவதாக குறிப்பிடப்படும் அந்த வீடியோவில், இந்தியாவின் பிரச்சினைகளுக்குள் அமெரிக்கா தலையிட வேண்டாம் என அவர் பேசுவதாக உள்ளது. இந்த வீடியோ தற்போது காங்கிரஸாரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Edit by Prasanth.K