ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண் சவுமியாவை தண்டவாளத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து 7 ஆண்டு சிறை தண்டனையாக விதித்துள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (23) என்ற இளம்பெண் எர்ணாகுளம்–சோரனூர் ரெயிலில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவிந்தசாமி என்ற கை ஊனமுற்ற நபர், சவுமியா இருந்த பெட்டியில் திடீரென நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நினைத்து ஓடும் ரயிலில் இருந்து சவுமியா குதித்துள்ளார்.
பின்னர், ரயில் மெதுவாக சென்றதை அடுத்து சவுமியாவை தொடர்ந்து கோவிந்தசாமியும் கீழே குதித்து, தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமின்றி கற்பழித்துள்ளார். மேலும், சவுமியா வைத்திருந்த பை உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
தலையில் பலத்த காயத்துடன் தண்டவாளம் அருகே மயங்கி கிடந்த சவுமியாவை சிலர் மீட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6ஆம் தேதி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சொர்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமிக்கு திருச்சூர் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனையடுத்து, கோவிந்தசாமி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு தள்ளுபடி ஆனதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித் உச்சநீதிமன்றம், போதுமான சாட்சிகள், ஆதாரங்கள் இல்லை என்பதால் கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.