2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் வளர்ச்சி சரிவடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டில் வருவாய் இலக்கை எட்டுவதற்கான உத்தி ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையற்ற பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் புதிய திட்டங்களையும் சதானந்த கௌடா அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் விலை உயர்வு காரணமாக நெருக்கடியைச் சந்தித்து வரும் மத்திய அரசு, சூரிய மின்சக்தி மற்றும் பயோ டீசல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ரயில்வே திட்டங்களும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ரயில் நிலையங்கள் நவீனப்படுத்துதல், அதிவேக விரைவு ரயில் உற்பத்தி உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான தனது கொள்கையை ரயில்வே பட்ஜெட்டில் அரசு வெளியிடும்.
ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.