மக்களவையில் புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் அமர்ந்திருந்தபோது, தலையை சாய்த்துக் கொண்டு கண்ணை மூடியபடி ராகுல் காந்தி இருப்பது மக்களவை தொலைக்காட்சியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
எனினும், மக்களவையில் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, "விலைவாசி உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாகவே தூங்கிக் கொண்டுதான் இருந்தது. விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின்போது ராகுல்காந்தி தூங்கியுள்ளார். இந்த விவாதத்தில் சலிப்பு ஏற்பட்டு அவர் தூங்கி இருக்கலாம்' என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரஃபுல் படேல் கூறுகையில், "மக்களவையில் பல நேரங்களில் பல உறுப்பினர்கள் கண்களை மூடியபடி இருப்பர். இதை வைத்து அவர்கள் தூங்குவதாக கருதக்கூடாது'' என்று தெரிவித்தார்.