புதிய ரூபாய் நோட்டால் வெடிக்கும் வன்முறை!
புதிய ரூபாய் நோட்டால் வெடிக்கும் வன்முறை!
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகிறது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து மக்கள் தங்கள் கையில் பணம் இல்லாததால் அன்றாடை வாழ்க்கையை நடத்த பெரிதும் சிரமப்பட்டனர். வங்கிகளிலும், ஏடிஎம் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. நீண்ட நெடும் வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் நின்று பணத்தை மாற்றியும், எடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இதில் உள்ள குளறுபடிகளாலும், நடைமுறை சிக்கல்கள், நடைமுறைகள் போன்றவற்றாலும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வன்முறைகள் வெடித்து வருகிறது. நாடு முழுவதும் இதனால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் உணவுப்பொருட்கள் தர மறுத்த கடையில் இருந்து உணவுப்பொருட்களை மக்கள் சூறையாடிச் சென்றனர் இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
* கேரளாவில் வங்கி ஒன்றை பொதுமக்கள் அடித்து உடைத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
* இன்று டெல்லியிலும் பொதுமக்கள் வங்கி ஒன்றை அடித்து உடைத்துள்ளனர்.
* டெல்லியில் ஏடிஎம்கள் செயல்படாததால் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் மெட்ரோ மாலில் நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர்.
* பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
* கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலை முதல் நீண்ட நேரமாக வரிசையில் நின்ற மக்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து வங்கியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
* பீகாரின் சம்பரன் மாவட்டத்தில் வங்கி ஒன்றின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் அருகில் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்ததால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
* உத்தரப் பிரதேசம், முஸாபர்நகர் அருகே, சுஜ்ரு கிராமத்தில் உள்ள வங்கி கட்டிடத்தின் மீது பொதுமக்கள் கற்களை வீசித்தாக்கியுள்ளனர்.
* அவுரங்காபாத், பாட்னா, கயா, முஸாபர்பூர், மதுபாணி, பாகல்பூர், ககாரியா மாவட்டங்களிலும் வங்கிகளில் பணம் கிடைக்காமல் பொது மக்கள் வன்முறையிலும் ஈடுபட்டதாக தகவல்கள் வருகின்றன.
* ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஆந்திரா மற்றும் டெல்லியில் பொதுமக்கள் வங்கி ஏடிஎம்களை அடித்து சூறையாடிய சம்பவம் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.
* திருவள்ளூர் அருகே பொன்னேரியில் ஏடிஎம்-இல் பணம் கிடைக்காத விரக்தியில் எச்.டி.எஃப்.சி வங்கியின் ஏடிஎம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள கண்ணாடிகள் உடைந்தன.